தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை மாணவி கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த 15 வயது சிறுமியின் கல்வி செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால், அவரது பெற்றோர் இது குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும், இதனால் அவர் மனமுடைந்து கோபத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தெலங்கானாவில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் ஆகும். முன்னதாக, நிஜாமாபாத் மாவட்டம், சந்த்ரூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு 10-ஆம் வகுப்பு மாணவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.