கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர் பகுதியில், வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதில் முதலாமாண்டு நர்சிங் மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்டெர்லின் எலிசா ஷாஜி மற்றும் ஜஸ்டின் ஜோசப் ஆகிய இருவரும் பெங்களூருவில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த மாணவர்கள் இருவரும் தங்கள் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தபோது, சிக்கபனாவரா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது, பெங்களூருவிலிருந்து பெலகாவி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த மரணங்கள் விபத்தா அல்லது தற்கொலையா என்பதை கண்டறிய, ரயில்வே போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பெங்களூரு கிராமப்புற ரயில்வே காவல் நிலையத்தில் 'இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.