அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
வெனிசுவேலாவின் ஜனநாயக உரிமை போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக பெருமை பேசும் டிரம்ப் ஏமாற்றமடைந்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், நோபல் தெரிவுக் குழுவின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "அதிபர் டிரம்ப் பல போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து, உயிர்களைக் காப்பாற்றினார். அவருக்கு நோபல் மறுக்கப்பட்டது, அக்குழுவினர் 'அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம்' கொடுக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது" என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்ப் மனிதாபிமானமிக்கவர் என்றும், அவரை போல யாரும் இல்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.