நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராட்சசன் படத்திற்குப் பிறகு, விஷ்ணு விஷால் இந்த படத்தில் மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டா குஸ்தி படத்தின் வெற்றிக்கு பிறகு, விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மோகன்தாஸ் படத்திற்கான எதிர்பார்ப்பும் தொடர்கிறது. தற்போது, ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், பிரவீன் இயக்கும் ஆர்யன் படத்திலும் விஷ்ணு விஷால் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்தது. இந்தப் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் வெளியாகும் என்ற செய்தி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.