தமிழ் சினிமாவில் ஒரு வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். முன்னணி நடிகர்கள் இல்லாமல் திரைக்கதையின் பலத்தால் உருவாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதன் பின்னர் லோகேஷின் சினிமா கிராஃப் ஏற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளது. "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிப் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களாக வரத் தொடங்கியுள்ளன.
படம் பெரியளவில் வசூல் செய்தாலும் லோகேஷ் மீது ட்ரோல்களும் படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள் குறித்தக் கேள்விகளும் அதிகளவில் எழுந்துள்ளன. இதனால் லோகேஷ் மேல் ரசிகர்களுக்கு இருந்த நம்பிக்கையும் கவர்ச்சியும் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா இல்லை கூலி படத்தின் மீதான விமர்சனங்களை நீர்த்துப் போக செய்ய திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தியா என விவாதங்கள் தொடங்கியுள்ளன.