தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது புதிய திரைப்படமான 'ரிவால்வர் ரீட்டா'வின் விளம்பர நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ளதாக கூறினார்.
"துபாய் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கிறது. துபாயில் கடுமையான சட்டங்கள் இருப்பதால் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. இந்தியாவிலும் இதேபோன்ற சூழல் உருவாகி, நிலைமை மாற வேண்டும். சமீபத்தில் என்னுடைய புகைப்படங்கள் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டன. அதைப் பார்க்கும்போது நான் இப்படி எல்லாம் எப்போது ஆடை அணிந்தேன் என எனக்குத் தோன்றும். அவ்வளவு ஆபாசமான ஆடைகளை நான் அணிந்ததில்லை. ஏ ஐ என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அது எங்கோ சென்று கொண்டிருக்கிறது. ஏ ஐ இப்போது பயத்தைக் கொடுக்கும் ஒன்றாக உள்ளது" என்று தன் கருத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியிடம் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தக் கருத்து பற்றிப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி “மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் தளமாக ஏ ஐ தொழில்நுட்பம் உள்ளது. வரும் காலங்களில் விவசாயிகள் ஏ ஐ மூலமாக அதிகப் பயன்பெறுவார்கள்” என அதன் நேர்மறையான அம்சம் குறித்துக் கூறியுள்ளார்.