Publish Date: Thu, 04 Dec 2025 (14:43 IST)
Updated Date: Thu, 04 Dec 2025 (14:44 IST)
வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை லேசாக சூரிய வெளிச்சம் தென்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மீண்டும் மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ளது.
வடபழனி, கிண்டி, தாம்பரம், பட்டினப்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், "சூரியன் வெளிச்சம் வந்தாலும் நம்பி துணிகளை காயவைக்காதீர்கள்" என்று வேடிக்கையாக எச்சரித்துள்ளார். இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சாலையில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.