டெட்வா புயல் காரணமாக கடந்த நான்கைந்து நாட்களாகவே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு அங்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மழை வெள்ளம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள சாலைகளில் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வாகன ஓட்ட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
சென்னையில் மழை பெய்தால் மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சென்னையில் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றதாக பொதுமக்கள் புகார் சொன்னார்கள். எனவே அதிமுகவும், பாஜகவும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக 4 ஆயிரம் கோடி எங்கே போயிற்று/ என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என கூறியிருக்கிறார்.