அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், இன்று த.வெ.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். "2026-ல் தமிழ்நாட்டில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகும்" என்றும், அதற்காகவே விஜய்யுடன் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பிளவுபட்ட நிலையில் அனைவரும் இணைய வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும், அதற்காக தேவர் ஜெயந்திக்கு சென்றதற்கான பரிசாகவே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். 50 ஆண்டுகால உழைப்பிற்கு இதுவே அ.தி.மு.க. தனக்களித்த பரிசு என்றார்.
"தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான். மூன்றாவதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். டெல்லி, பஞ்சாப் போல தமிழகத்திலும் மாற்றம் வேண்டும்" என்று அவர் கூறினார்.
புதிய புனித ஆட்சி அமைய இளவல் விஜய் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்த செங்கோட்டையன், வேறு எந்தக் கட்சியிலிருந்தும் தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.