தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய உறுப்பினர்களுக்கான சீட்டில் தேமுதிகவிற்கு, அதிமுக சீட் ஒதுக்குமா என்று தேமுதிக காத்திருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில் மாநிலங்களவையில் ஒரு சீட் தருவதாக அதிமுக கூறியிருந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூற, அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். இதனால் இரு கட்சிகளிடையே கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஜூலை 24 உடன் முடிவடைவதால், அடுத்த மாநிலங்களவை உறுப்பினருக்கு பெரும் போட்டி எழுந்துள்ளது. இதில் அதிமுக தரப்பில் 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற வகையில், அதிமுக தலைமை தேமுதிகவுக்கு ஒரு சீட் தருமா என்ற கேள்வி உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “தற்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். பொறுமை கடலிலும் பெரிது. சட்டமன்ற நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K