மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் மற்றும் உணவு பொருட்களின் அதிக விலை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. விலைகளை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் திரையரங்குகள் விரைவில் காலியாகிவிடும் என்றும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு கருத்து தெரிவித்தது.
கர்நாடக உயர் நீதிமன்றம் டிக்கெட் விலையை ரூ.200 என வரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்தபோது இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
விசாரணையின்போது, "ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.100, காபிக்கு ரூ.700 வசூலிக்கிறீர்கள்" என்று நீதிபதி நாத் கேள்வி எழுப்பினார். இதற்கு மல்டிபிளெக்ஸ் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "தாஜ் ஹோட்டல் விலையை நிர்ணயிக்க முடியுமா?" என்று கேட்டார்.
பதிலளித்த நீதிபதி, "சினிமா துறை தேய்ந்து வருகிறது. மக்கள் வந்து பார்க்க வசதியாக விலையை நியாயமாக நிர்ணயிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார். மேலும், இப்போது சாதாரண திரையரங்குகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.