சில எக்ஸ் கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட அனுமதிக்க முடியாது. நாட்டில் செயல்பட விரும்பும் ஒவ்வொரு நிறுவனமும் இதை புரிந்துகொள்ள வேண்டும்," என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19இன் கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துரிமை, இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்களின் தீமைகளை கட்டுப்படுத்துவது அவசியம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. "எந்தவொரு சமூக ஊடக தளமும் நாட்டின் சட்டங்களில் இருந்து விலக்கு கோர முடியாது" என்றும், "இந்தியச் சந்தைகள் ஒரு விளையாட்டு மைதானமாக கருதப்பட முடியாது" என்றும் கூறி, எக்ஸ் நிறுவனத்தின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.