பிகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளன. அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் மேற்கொண்ட தீவிர பிரசாரம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பிகாரில் சசராம் முதல் பாட்னா வரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, 110 தொகுதிகளில் 'வாக்காளர் அதிகார யாத்திரை' நடத்தினார். ஆனால், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அவர் பிரசாரம் செய்த இந்த 110 தொகுதிகளில் ஒன்றில்கூட காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறவில்லை.
மாலை 4 மணி நிலவரப்படி, 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது, ராகுல் காந்தியின் பிரசாரம் பிகார் வாக்காளர்களை சென்றடையவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 208 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை உறுதி செய்துள்ளது.