பெங்களூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போன 13 வயது சிறுவன், கக்கலிபுரா ஒரு வெறிச்சோடிய பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிச்சித் ஏ என்ற 13 வயது சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை மாலை 5 மணியளவில், தனது வீட்டிலிருந்து டியூஷன் செல்வதற்காக சென்ற அவர், இரவு 7.30 மணி வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், டியூஷன் ஆசிரியரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, மாணவர் வழக்கம் போல் குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிட்டதாக ஆசிரியர் கூறியுள்ளார்.
இதையடுத்து, பெற்றோர் நிச்சித்தை தேடியபோது, அரெகெரே குடும்ப பூங்கா அருகே அவரது சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தெரியாத எண்ணிலிருந்து ரூ.5 லட்சம் கேட்டு அழைப்பு வந்ததையடுத்து, நிச்சித்தின் தந்தை ஜெ.சி.அச்சித், மகன் காணாமல் போனது மற்றும் கடத்தப்பட்டது குறித்து ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அழைப்பு வந்த இடத்தைத் தேட தொடங்கினர். நேற்று நிச்சித்தின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.