காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பெங்களூரு மற்றும் தாம்பரம் இடையே புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஏசி பேருந்து சேவையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய மொத்தம் மூன்று அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவை பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏசி பேருந்துகளில், பயணிகளுக்கான மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பயணிகள் இறங்கும் இடங்களை பற்றி ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான ஒலிபெருக்கிகள் போன்ற நவீன வசதிகள் உள்ளன.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில், எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த புதிய ஏசி பேருந்து சேவை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கும், பெங்களூரு மற்றும் தாம்பரத்திற்கு செல்வதற்கும் பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.