சமூக ஊடகங்களில் அதிக லைக்குகளை பெறுவதற்காகச் செய்யப்படும் அபாயகரமான சாகசங்கள் குஜராத் மாநிலம் சூரத் நகரில் விபரீதமாக முடிந்துள்ளது.
சூரத் டூமாஸ் கடற்கரையில் கார் ஓட்டத் தடை உள்ள நிலையில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது மெர்சிடிஸ் சி220 சொகுசு காரை எடுத்துச் சென்று, ரீல் வீடியோ எடுப்பதற்காக சாகச டிரைவ் செய்ய முயன்றார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக கடலுக்குள் புகுந்து மணலில் சிக்கியது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், தடையை மீறி சாகசம் செய்த ஓட்டுநர் மற்றும் காரின் உரிமையாளர் ஆகிய இருவரையும் டூமாஸ் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தால் காரின் உரிமையாளர் கோரும் காப்பீட்டு உரிமைகோரல்கள் நிராகரிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.