திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் புனிதம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை பாதுகாக்கும் நோக்கில், கோயில் வளாகத்திற்குள்ளும் அதை சுற்றியும் சமூக வலைத்தளங்களுக்கான ரீல்ஸ் எடுப்போருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல காணொளிகளில் கோயிலின் புனிதம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை குறைப்பது போன்று உள்ளது. இது லட்சக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்கள் ஒரு ஆன்மிக தலத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவை என்றும் தேவஸ்தானம் கண்டித்துள்ளது.
அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயில் விதிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் ஆன்மிக சூழலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்களை உருவாக்குவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருமலையின் புனிதத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.