பீகாரில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள், புர்கா அணிந்து வரும் வாக்காளர்கள் மீது சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் "சந்தேகத்திற்குரிய புர்கா அணிந்த வாக்காளர்கள் கண்டிப்பாக சோதிக்கப்படுவார்கள்; அதற்கென அதிகாரிகள் கண்காணிக்க காத்திருப்பார்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் "பீகாரில் ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது, இது பீகார், பாகிஸ்தான் அல்ல" என்று அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தனது அரசியல் உரைகளில் இதுபோன்ற கருத்துகளை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது வழக்கம். இதற்கு முன்னரும் பல தேர்தல் காலங்களில் இவர் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இந்த முறை அவர் வெளியிட்ட "இது பாகிஸ்தான் அல்ல" என்ற கருத்து, எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த கருத்துக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து, தேர்தல் விதிகளை மீறும் வகையில் அவர் பேசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.