கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வளாகத்திற்குள் இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' காணொளியை படமாக்கியதற்காக, ஓவிய கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் காணொளி எடுக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் எழுந்த சர்ச்சையால், புனித தலங்களில் 'ரீல்ஸ்' எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை மீறி, கிருஷ்ணர் ஓவியங்களை வரையும் கலைஞரான ஜஸ்னா சலீம் தற்போது கோயில் வளாகத்திற்குள் 'ரீல்ஸ்' எடுத்துள்ளார். இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிருஷ்ணரின் பக்தையான ஜஸ்னா சலீம், இதற்கு முன்னதாகக் கோயிலின் காணிக்கைப் பெட்டியின் மீதிருந்த கிருஷ்ணர் சிலைக்கு மாலையிட்டதைக் காணொளி எடுத்ததற்காகவும், கோயில் அருகே கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி அவர் தொடர்ச்சியாகச் செயல்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது