ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற நீரஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி அமாயிரா, நவம்பர் 1-ஆம் தேதி பள்ளி கட்டடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தனது மகள் 'புல்லிங்' தொல்லை மற்றும் பாலியல் ரீதியான கேலிகளுக்கு ஆளானதாகவும், இதுகுறித்து ஓராண்டாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அமாயிராவின் தாய் ஷிவானி மீனா, "பள்ளிக்குப் போக மாட்டேன்" என்று மகள் அழுத குரல் பதிவை ஆசிரியருக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. ஒரு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில், மற்ற மாணவர்கள் அமாயிராவை கேலி செய்தபோது, ஆசிரியர் அதை கண்டிக்காமல், அவர் 'பையன்களுடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று பதிலளித்துள்ளார்.
தற்கொலைக்கு சற்று முன் அமாயிரா ஆசிரியரிடம் பேசியது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ஆனால், சிபிஎஸ்இ வழிகாட்டுதல்களை மீறி அதில் ஆடியோ பதிவு இல்லை. மேலும், 5,000 குழந்தைகள் படிக்கும் பள்ளியில், பல மாடி கட்டடங்களில் பாதுகாப்பு வலை அல்லது கிரில் இல்லாதது ஏன் என்றும் பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர். காவல்துறை பெற்றோரின் வாக்குமூலங்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.