இந்திய விளம்பர உலகின் அடையாளமாக திகழ்ந்தவரும், புகழ்பெற்ற ஃபெவிகால், கேட்ஃபரி, ஏசியன் பெயின்ட்ஸ் விளம்பரங்களை உருவாக்கியவருமான பியூஷ் பாண்டே தனது 70வது வயதில் காலமானார். அவர் ஓகில்வி நிறுவனத்தின் உலகளாவிய தலைமை படைப்பாற்றல் அதிகாரியாக பதவி வகித்தார்.
சுமார் 40 ஆண்டூகளாக விளம்பரத் துறையில் பணியாற்றிய அவர், தனது எளிய நகைச்சுவை மற்றும் இந்திய பின்னணி கொண்ட விளம்பரங்கள் மூலம் தகவல் தொடர்பின் வடிவத்தை மாற்றியமைத்தார். இவரது தலைமையில், ஓகில்வி இந்தியா தொடர்ந்து 12 ஆண்டுகள் நம்பர் 1 நிறுவனமாகத் திகழ்ந்தது.
பியூஷ் பாண்டேவுக்கு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விளம்பரங்களை தாண்டி, "மெட்ராஸ் கஃபே" திரைப்படத்தில் நடித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய புகழ்பெற்ற பாடலான "மிலே சுர் மேரா தும்ஹாரா" பாடலை எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உதய் கோட்டக் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறவுள்ளன.