வடசென்னையில் புகழ்பெற்ற தாதாவான 'நாகு' என்கிற நாகேந்திரன் உடல்நல குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 73. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், அவரது இறுதிச்சடங்கில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை வீரராக விரும்பிய நாகேந்திரன், 1990-களில் ரௌடி வெள்ளை ரவியுடன் ஏற்பட்ட நட்பால் குற்ற உலகில் நுழைந்தார். ஒரே குத்தில் எதிரியை வீழ்த்தும் திறன் காரணமாக, வெள்ளை ரவியின் கூட்டத்தில் முக்கியத் தளபதியாக உயர்ந்தார். அவர் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் பதிவாகியுள்ளன.
1997-ல் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும், பகுஜன் சமாஜ்வாடி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தன் மகன் அசுவத்தாமன் மூலம் திட்டமிட்டதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீண்ட காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.