தற்காலக் கிரிக்கெட் பெரிதும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவிட்டது. ஐசிசி அமல்படுத்தும் புதிய விதிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளன. அதனால் பவுலர்கள் பெரியளவில் சாதனைகள் செய்வது அரிதாகிவிட்டது.ஆனால் அதிலும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மிட்செல் ஸ்டார்க். மூன்று வடிவிலானக் கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய அனல் தெறிக்கும் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்து வருகிறார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வந்த ஸ்டார்க் சமீபத்தில் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது அவருக்கு 35 வயது ஆவதால் இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாகவும், மற்ற வடிவ போட்டிகளில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் “நான் சந்தித்த கிரிக்கெட் வீரர்களிலேயே கோலிதான் நம்பர் 1 வீரர். அவர் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் விதம் அலாதியானது. அவருடன் ஆர் சி பி அணியில் பயணித்தது நல்ல அனுபவம்” எனப் பாராட்டியுள்ளார்.