வரலாற்று சிறப்பு மிக்கத் தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர் நேற்று ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுந்தன. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து ஆல் அவுட் ஆக அதே போல ஆஸி அணி தொடர்ந்து பேட் செய்து 9 விக்கெட்களை இழந்தது.
இந்த 19 விக்கெட்களில் அனைத்தையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் வேகப்பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவம் பற்றியும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யமான நாட்களில் ஒன்று எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் நேற்றையப் போட்டியை வர்ணித்து வருகின்றனர். ஆனால் சில தினங்களுக்கு முன்னால் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி இதே போல விரைவாக விக்கெட்கள் விழுந்தபோது இந்திய மைதானங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்த இரட்டை மனநிலை குறித்து அஸ்வின் தற்போது விமர்சித்துள்ளார். அதில் “வெறும் 19 விக்கெட்கள்தான் பெர்த்தில் விழுந்துள்ளன. கிரிக்கெட்டின் சிறப்பான நாட்களில் ஒன்று. ஓ… இல்லை. இதுவே நாளை கௌகாத்தி மைதானத்தில் நடந்தால் என்ன ஆகும்?” என நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.