இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியையும் இழந்த நிலையில் இந்த தோல்வியால் வொயிட்வாஷ் ஆகியுள்ளது இந்தியா. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
இதனால் பயிற்சியாளர் கம்பீர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவர் சீனியர் வீரர்களான அஸ்வின், ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்து ஓய்வுபெறவைத்துவிட்டு பரிசோதனை என்ற பெயரில் அணியில் வீரர்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அது இந்திய அணிக்குக் கைகொடுக்கவில்லை. அதனால் அவர் பதவி விலகவேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின் கம்பீருக்கு ஆதரவாகப் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “கம்பீர் மேல் தவறு இருக்கலாம். ஆனால் முழுவதுமே அவர் காரணம் என்று சொல்ல முடியாது. இந்திய வீரர்கள் இப்படிதான் டிஃபன்ஸ் ஆடுவார்கள் என்றால் அவரால் என்ன செய்ய முடியும். இந்திய வீரர்கள் யாருமே இந்த தொடரில் 100 ரன்களுக்கு மேல் எதிர்கொள்ள வில்லையே” எனக் கூறியுள்ளார்.