அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்த நிலையில், "இனி அமெரிக்காவிற்கு கோடிக்கணக்கில் வரிப்பணம் கொட்டப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 25% ஆக அறிவிக்கப்பட்ட இந்தியாவுக்கான இறக்குமதி வரி, திடீரென 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள பிரேசில் நாட்டிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிரம்ப் பேசுகையில், பல ஆண்டுகளாக அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்ட நாடுகளிடம் இருந்து, பல கோடி டாலர்கள் வரியாக கிடைக்கப் போகிறது என்றும், அமெரிக்கா தோற்றுப் போக வேண்டும் என்று நினைக்கும் நாடுகளுக்கு இது ஒரு சவால் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், 50% இறக்குமதி வரி செலுத்தி எந்த நாடு பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்பதை டிரம்ப் யோசிக்கவில்லை. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவிற்கு செய்யும் ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், டிரம்ப் எதிர்பார்த்த வரிப்பணம் அமெரிக்காவிற்கு கிடைக்காமல் போகலாம்.