தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் படத் தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மார்கன் திரைப்படம் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய பிளாக்பஸ்டர் வெற்றி படமான பிச்சைக்காரன் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்தார். ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.