தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், இயக்குனராகவும் அறியப்பட்ட பழம்பெரும் கலைஞர் ஜி சீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95. இவர் தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணியில் இருந்த நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர் ஆவார்.
சீனிவாசன் தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட கலைஞராக விளங்கினார். இதுவரை 8 படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். மூன்று படங்களை இயக்கியுள்ளார். இவர் நடித்ததில் முரட்டுக் காளை, ராஜாதி ராஜா, மனிதன் மற்றும் வாழ்வே மாயம் போன்ற படங்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்கன.
இவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் பார்வைக்காக அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று மாலை ஏவிஎம் மின் மயான இடுகாட்டில் தகனம் செய்யப்படவுள்ளது.