போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் தன்னிடம் ஸ்ரீகாந்த் கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், அதை தானே நேரில் பார்த்ததாகவும் வாக்குமூலம் கொடுக்க, ஸ்ரீகாந்த்துக்கு நேற்று போதைப் பொருள் சோதனை செய்யப்பட்டது.
அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உண்மை எனத் தெரியவர அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தில் போதை பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் போதை பொருள் கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருப்பதாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். அதில் “தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக போதை பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்று வருவதால் அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.