பா ரஞ்சித்தின் இயக்கத்தில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் ரிலீஸானது. அதையடுத்து அவர் தற்போது தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அவரே முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் வருகிறார். தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் இறந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்டுவம் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
முன்னதாக படம் பற்றிப் பேசிய பா ரஞ்சித் “நான் முதலில் வேட்டுவம் படத்தை ஒரு கேங்ஸ்டர் கதையாகதான் எழுதினேன். ஆனால் இந்த படத்தை ஏன் உருவாக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. அந்த படம் சொல்லவருவது அதிகாரப் பகிர்வு பற்றிதான். அதனால் அதன் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு உலகத்துக்குக் கதையை மாற்றினேன். வேட்டுவம் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு அறிவியல் புனைகதையாக உருவாகி வருகிறது. பார்வையாளர்கள் கொண்டாடக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியிருந்தார்.