கடந்த வாரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார்.
சுந்தர் சி விலகல் குறித்துப் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் “நான் இந்த படத்தில் முதலீட்டாளன். என் நட்சத்திரத்துக்குப் பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்யமானது. அதற்கானக் கதைகளைக் கேட்டு வருகிறோம். நல்ல கதைதான் முக்கியம். புது இயக்குனர்களுக்கும் வாய்ப்புள்ளது. வேறு கதைகளைக் கேட்டு வருகிறோம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றில் இருந்து தலைவர் 173 படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமானப் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனுஷும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து செய்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.