கடந்த வாரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார்.
இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் “நான் இந்த படத்தில் முதலீட்டாளன். என் நட்சத்திரத்துக்குப் பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்யமானது. அதற்கானக் கதைகளைக் கேட்டு வருகிறோம். நல்ல கதைதான் முக்கியம். புது இயக்குனர்களுக்கும் வாய்ப்புள்ளது. வேறு கதைகளைக் கேட்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.