Publish Date: Tue, 10 Jun 2025 (17:47 IST)
Updated Date: Tue, 10 Jun 2025 (17:50 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றை 'வீர வீர சூரன்' படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அந்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்த ஆலோசனை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் அருண்குமார் இந்த படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி அல்லது சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று கூறிய நிலையில், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை படக்குழு முடிவு செய்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட இந்த படத்தில் நடிப்பது விஜய் சேதுபதியாகத்தான் இருக்கும் என்றும், சூர்யா நடிக்க வாய்ப்பு குறைவு என்றும் இன்னொரு பக்கம் கூறப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, தமிழ் திரை உலகின் முன்னணி நாயகி ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பாலிவுட் நடிகர் ஒருவர்தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.