தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கானக் காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை ஒட்டி ஏற்கனவே தி டர்ட்டி பிக்சர் என்ற படம் இந்தியில் உருவாகி அதில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இப்போது தமிழிலும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்தராஜ் பகிர்ந்துள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “சில்க் ஸ்மிதா எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் கூட என்னோடுதான் ஒரு படத்தில் டான்ஸ் ஆடினார். அவரது மரணத்துக்குக் காரணமே அவருக்கு இருந்த மன அழுத்தம்தான்” எனக் கூறியுள்ளார்.