தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதாவது வித்தியாசமான முயற்சிகளை செய்துகொண்டே இருப்பவர் இயக்குனர், நடிகர் பார்த்திபன். அந்த வகையில் அவர் இயக்கிய ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
தொடர்ந்து இட்லி கடை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் தன்னுடைய மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் இயக்குனர் ஆகவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் சமூகவலைதளப் பதிவில் “ராக்கி பார்த்திபன்! என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார்.
விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.