பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக்லைஃப் திரைப்படம், இந்தியன் 2 மற்றும் ரெட்ரோ படத்தை விட மோசமான முதல் நாள் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாயகன் படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன்–மணிரத்னம் கூட்டணி இணைந்ததால், தக்லைஃப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சிம்பு, த்ரிஷா போன்ற பெரிய நட்சத்திரங்கள், ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பதால், இந்த படத்தின் முதல் நாள் வசூல் உச்சத்துக்கு செல்லும் என்று கூறப்பட்டது.
ஆனால் நேற்றைய முதல் நாளில் இந்த படம் வெறும் ரூ.17 கோடி தான் வசூலித்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர்–கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் கூட முதல் நாளில் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. சூர்யாவின் ரெட்ரோ படம் 19 கோடி வசூல் செய்தது.
ஆனால் தக்லைஃப் திரைப்படம் மிக மோசமான முதல் நாள் வசூலை பெற்றுள்ளது. இன்றே பெரும்பாலான தியேட்டர்கள் காலியாக இருப்பதால், இந்த படத்தின் வசூல் படு வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.