இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்த மைல்கல்லை எட்டினார்.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
டெஸ்டின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி வலுவான நிலையில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து சிறந்த தொடக்கத்தை அளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி சிறப்பாக ரன் குவித்த நிலையில் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை ஜோரூட் எட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த முன்னணி வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் - 15,921 ரன்கள்
ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்
ஜோ ரூட் - 13,290* ரன்கள்
ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்
ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்
இந்த சாதனை, சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் நிலைத்த தன்மையையும், சிறப்பையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.