இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 124 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், இந்திய அணி வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சந்தித்த இந்த தோல்வியின் மூலம், இரண்டாவது மிகக்குறைந்த இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தடுமாறி உள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு 120 என்ற இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்த நிலையில், தற்போது 124 என்ற இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.