இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பிரபலமான பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கு இணையான பிரபலத்தை கொண்ட பிக் பாஷ் தொடர், வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, அஸ்வின் சிட்னி தண்டர் அணியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், அஸ்வினுக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் காயம் காரணமாக, அவரால் இந்த ஆண்டு பிக் பாஷ் தொடரில் பங்கேற்க முடியாது என்று லீக் நிர்வாகம் தனது சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிக் பாஷ் லீக்கில் விளையாடவிருக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த காயம் மற்றும் விலகல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.