Publish Date: Wed, 25 Apr 2018 (10:12 IST)
Updated Date: Wed, 25 Apr 2018 (10:19 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த பேராசிரியர் நிர்மலாதேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், அருப்புக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கணிப்பொறி, பென் டிரைவ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், அவரது காரிலும் அவர்கள் சோதனை நடத்தினார்.
அப்போது, ஒரு ரகசிய டைரியை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், அவருடன் தொடர்பில் இருந்த பல விவிஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் இருந்தனவாம்.
இந்நிலையில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவிகள் பேராசிரியை நிர்மலா தேவி மீது புகார் அளித்துள்ளனர். புகாரை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.