Publish Date: Sat, 21 Apr 2018 (07:37 IST)
Updated Date: Sat, 21 Apr 2018 (08:01 IST)
கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரித்தால் தான், இதில் தொடர்புடையவர்கள் அரசு அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்பது தெரியவரும் என்று கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் பாஜக பினாமி ஆட்சியான அதிமுக வை மக்களே தீர்த்து கட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.