Publish Date: Sat, 21 Apr 2018 (11:39 IST)
Updated Date: Sat, 21 Apr 2018 (11:41 IST)
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசார் நேற்று முன் தினம் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். அதேபோல், ஆளுநரால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் நேற்று விசாரணையை துவங்கியது.
நிர்மலா தேவியும், அவரது கணவர் சங்கர பாண்டியனும் கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ஒருகட்டத்தில், நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், மகள்களின் எதிர்காலம் தொடங்கி அந்த மனுவை திரும்ப பெற்றார்.
இந்நிலையில், கல்லூரி மாணவிகள் புகாரில் நிர்மலா தேவி சிக்கியதை அடுத்து, தற்போது மீண்டும் சங்கர பாண்டியன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார். இரு மகள்களும் சங்கரபாண்டியன் பாதுகாப்பிலேயே வளர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் சென்னையிலும், ஒருவர் மதுரையிலும் படித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.