திருச்செந்தூரில் கடல் அவ்வப்போது திடீரென உள்வாங்குவதும், குறிப்பாக அமாவாசை தினத்தில் கடல் உள்வாங்குவது கடந்த சில மாதங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் கடல் வழக்கத்தை விட அதிகமாக, சுமார் 80 அடிக்கு உள்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு இவ்வளவு தூரம் கடல் உள்வாங்கியிருப்பது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இந்த அரிய நிகழ்வை காண, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், உள்வாங்கிய கடலை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும், பாசி படிந்த பாறைகள் மீது ஏறி, பக்தர்கள் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். ஆனால், ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் பக்தர்களை போலீசார் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இயற்கையின் இந்த விசித்திர நிகழ்வு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.