சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் ஆனி மாதத்தின் அமாவாசை நாளை வருகிறது. ஆனால், இன்றிரவு மாலை 6.56 மணிக்கே அமாவாசை திதி தொடங்குகிறது. எனவே, அமாவாசைக்கான இரவு வழிபாட்டை இன்றிரவே மேற்கொள்ளலாம்.
நாளை அதிகாலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரத்தில் மறைந்த முன்னோர்கள் மற்றும் உறவினர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி, முன்னோர்களின் படத்திற்குப் பூக்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் திதி, தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், அன்று வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால், திதி அளித்த பலன் உண்டாகும். தர்ப்பணம் முடிக்கும் வரை தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, அதன் பின் தினசரி பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் அசைவம் மற்றும் வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
நாளைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இது சாபங்களையும், பாவங்களையும் நீக்கித் தூய்மையாக்கும் நாள். குறிப்பாக, நாளை காலதேவனின் 3-வது ராசியில் (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், நீத்தார் வழிபாடு குடும்பத்தில் சகோதர ஒற்றுமையை மேம்படுத்தும். இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிப்பதே இதற்குக் காரணம்.
நாளை முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும். திருமணத் தடைகள் நீங்கி, வீண் பண விரயங்கள் குறைந்து, வெளிநாட்டு முயற்சிகள் மற்றும் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.