திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான திருத்தலமாகக் கருதப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் விழாவை காண இலங்கை, தமிழகம், மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வந்தனர்.
பக்தர்கள் அதிகாலையில் எழுந்து கடலிலும், நாழிக்கிணறும் தீர்த்தக்குளத்திலும் புனித நீராடினர். பிறகு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. மாலை சாயரட்ச தீபாராதனை மற்றும் முனிகுமாரர்களுக்கு சாப விமோசன வைபவம் நடைபெற்றது.
நெல்லை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களும், பால் குடம் எடுத்தோ, அலகு குத்தியும் சாமிக்கு அபிஷேகமளித்தனர். அவர்களது "அரோகரா" கோஷம் திருச்செந்தூரை அதிர வைத்தது.
கோவில் நிர்வாகம், மூத்த குடிமக்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்காக தனி வரிசை, அடையாள பட்டைகள், கழிப்பிடம், கடல் நீராடும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. விழா நிர்வாகத்தில் தக்கார் அருள் முருகன் மற்றும் அதிகாரிகள் தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.