மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டில், அதன் தலைவர் விஜய்யின் பேச்சு தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது உரையில், "ஸ்டாலின் அங்கிள், இது ரொம்ப தப்பு அங்கிள். தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் இந்த ஆட்சியின் லட்சணத்தை பார்த்துக் கொண்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால், அவர் ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் விடமாட்டேன். ஸ்டாலின் அங்கிள், உங்களுக்கு மனசாட்சி என்று இருந்தால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜய், "2026 தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பாஜக, அதிமுகவையும் விமர்சனம் செய்த அவர், "தாமரையில் தண்ணீரை ஒட்டாது, தமிழ்நாடு எப்படி ஒட்டும்?" என்று குறிப்பிட்டு பாஜக-வை மறைமுகமாகச் சாடினார். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலையைப் பற்றிப் பேசும்போது, "எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் தவிர்க்கிறார்கள். 2026-ல் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது அந்த அப்பழுக்கற்ற அதிமுக தொண்டர்களுக்குத் தெரியும்" என்று கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.