தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அதன் தலைவரான விஜய் குரலில் உருவான கொள்கை பாடல் வெளியாகி உள்ளது. மதுரையில் இன்று நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் அரங்கிற்கு, பாடல் பின்னணியில் ஒலிக்க விஜய் வருகை தந்தார்.
"உங்க விஜய் வரேன்", "பெரியாரின் பேரன் வரான்", "எளியவர்களின் குரல்" போன்ற வரிகள் அடங்கிய இப்பாடல், தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிரத்யேக நடைமேடையில், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், தவெக கொடியை தலையில் கட்டிக்கொண்டு விஜய் நடந்து வந்தார்.
இந்த மாநாட்டில், கட்சியின் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல், கட்சியின் கொள்கைகளையும், விஜய்யின் அரசியல் நோக்கத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்த மாநாட்டிற்கு வந்த கட்டுக்கடங்காத கூட்டம், மதுரை நகரையே குலுங்க செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது விஜய்யின் அரசியல் செல்வாக்கையும், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள வரவேற்பையும் காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.