Publish Date: Tue, 25 Nov 2025 (09:47 IST)
Updated Date: Tue, 25 Nov 2025 (09:49 IST)
எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வருபவர் செங்கோட்டையன். கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்தது மட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் யார் அடுத்த முதல்வர் என்கிற பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இருந்தது. கூவத்தூரில் சசிகலா தலைமையில் யார் அடுத்த முதல்வர் என ஆலோசித்தபோதும் அதில் செங்கோட்டையன் பெயர் இருந்தது. அந்த அளவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் வகித்து வந்தார் செங்கோட்டையன்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைப்பற்றி தலைமை பொறுப்புக்கு வந்தபின் அவர் மீது அதிருப்தியில் இருந்தார் செங்கோட்டையன். மேலும் சசிகலா, டிடிவி, தினகரன் ஓ.பன்னீர்செல்வம் ஆகியவரை கட்சியில் சேர்த்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என சொல்லி பழனிச்சாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அவரின் பதவிகளை பறித்தார்.
அதன்பின் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரே செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசியதால் அதிமுகவில் இருந்து அவரை நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, டெல்லி சென்று பாஜக தலைமையிடமும் ஆலோசனை செய்தார் செங்கோட்டையன். அப்போது அதிமுகவை ஒருங்கிணைக்கும் அசைண்ட்மெண்ட் அவருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் இவ்வார இறுதிக்குள் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணையவிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் செங்கோட்டையன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைந்தால் அது தவெகவிற்கு பலம் சேர்க்கும் என கணிக்கப்படுகிறது.