Publish Date: Thu, 12 Mar 2026 (17:47 IST)
Updated Date: Thu, 12 Mar 2026 (17:49 IST)
அதிமுகவில் 50 வருடங்களுக்கு மேல் பயணித்தவர் செங்கோட்டையன்.. எம்ஜிஆர் அதிமுகவை துவங்கிய காலத்திலிருந்து அந்த கட்சியில் பயணித்து வருபவர்.. எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் அமைச்சராக பதவி வகித்தவர்.
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் பலமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இருந்தது. ஆனால் சசிகலா ஆதரவால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது.
ஒருகட்டத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னது பிடிக்காமல் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் தவெக விழாவில் பேசிய செங்கோட்டையன் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்..
நான் தவெகவில் இணைந்த பிறகு என் சட்டை பாக்கெட்டில் மூன்று தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்தேன். அதைப்பார்த்த விஜய் சார் என்னை அழைத்து நீங்கள் அம்மா படத்தையே வைத்துக் கொள்ளுங்கள்.. அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னார். தன் படத்தைதான் மற்றவர்கள் பாக்கெட்டில் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தலைவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு பெருந்தன்மையான தலைவரை பார்க்க முடியுமா? என்று பீலிங்காக பேசியிருக்கிறார் செங்கோட்டையன்..