Publish Date: Mon, 23 Oct 2017 (12:59 IST)
Updated Date: Mon, 23 Oct 2017 (13:01 IST)
பிரதமர் மோடி இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என தான் கூறவே இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் கடந்த 20ம் தேதி கலந்து கொண்டு பேசிய அவர் “அதிமுகவிற்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மோடி பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் வரை அதிமுக கட்சியும், சின்னமும் நம்மிடமே இருக்கும். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. யாருக்கும் பயப்பட தேவையில்லை. ” என பேசியதாக செய்திகள் வெளியானது.
அதிமுகவை பாஜகவே இயக்குகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், அதை ஒத்துக்கொள்ளும் விதமாகவும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது போலவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ தமிழ் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் மோடி உள்ளவரை எந்த பயமும் இல்லை என்றுதான் கூறினேன். கட்சியை பாதுகாக்க, சின்னத்தை மீட்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதிமுக தயவில் பாஜக செயல்பட வேண்டிய அவசியமில்லை” என அவர் தெரிவித்தார்.